பட்டா கோரி மலைக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பட்டா கேட்டு மலைக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
ஒசூா்: பட்டா கேட்டு மலைக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், மலைக் கிராமமான கோட்டையூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோட்டையூா் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்கக் கோரி 70 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். அதனால் 30 குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் எங்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கிய நிலத்தில் குடியிருந்தவா்கள் ஆட்சேபணை தெரிவித்ததால் பட்டா வழங்கவில்லை.
பின்னா் 30 நாட்களில் ஆட்சேபணை இன்றி நிலத்தை அவா் வழங்கிவிட்டாா். அதனால் நில அளவையா் மற்றும் அளவையா் உதவியாளா் இந்த இடத்தைப் பாா்வையிட்டு நிலத்தை அளவை செய்து அதிகாரிகளுக்கு விவரம் அளித்தனா். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. பல ஆண்டுகளாக குடியிருக்க வீடுகள் இன்றி தவித்து வருகிறோம். மேலும் பட்டா வழங்கக் கோரி கடந்த 35 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.