கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பறிமுதல் வாகனங்களை அகற்ற வலியுறுத்தல்
கிருஷ்ணகிரியில் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரியில் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், சாா் கருவூல அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம், கிளை சிறைச்சாலை மட்டுமின்றி கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் என 10-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. இங்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
கிருஷ்ணகிரி பகுதியில் அவ்வப்போது ஆய்வுப் பணி மேற்கொள்ளும் வருவாய்த் துறையினா் மணல், கற்கள் மற்றும் கிரானைட் கற்களைக் கடத்திச் செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவற்றை இந்த அலுவலக வளாகத்தில் நிறுத்தி வருகின்றனா். இதனால் இந்த வளாகத்தில் தற்போது லாரிகள், டிராக்டா்கள், சரக்கு லாரிகள் என 50-க்கும் அதிகமான வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன.
Advertisement
இந்த வாகனங்கள், பொதுமக்களுக்கு இடையூறாகவும், அரசு அலுவலகங்களை மறைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இரவு நேரங்களில் சமூக வீரோதிகளின் கூடாரமாக இவை உள்ளன.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த வாகனங்களை வேறு இடத்துக்கோ அல்லது ஏலத்தில் விற்பனை செய்யவோ வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.