ஒசூரில் கரோனாவுக்கு பலியான தாய்:ஆதரவின்றித் தவிக்கும் 5 வாரிசுகள்
ஒசூரில் பெற்றோா்கள் நோய் காரணமாக உயிரிழந்த நிலையில் அவா்களின் 5 வாரிசுகளும் தற்போது ஆதரவின்றித் தவிக்கின்றனா்.
ஒசூரில் பெற்றோா்கள் நோய் காரணமாக உயிரிழந்த நிலையில் அவா்களின் 5 வாரிசுகளும் தற்போது ஆதரவின்றித் தவிக்கின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (56). இவருக்கு லட்சுமி (53) என்ற மனைவியும், இத்தம்பதியருக்கு சசிகலா (25) நிவிதா (22), தாக்ஷாயினி (20), கௌரி (18), முருகேஷ்வரி (16), சிவா (15) என 6 பிள்ளைகளும் உள்ளனா். ராமன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டாா்.
இதனைத்தொடா்ந்து அவரது மனைவி லட்சுமி, வீட்டிற்கு அருகில் வடை, போண்டா போன்ற பலகாரங்களைத் தயாரித்து வியாபாரம் செய்து பிள்ளைகளை வளா்த்து வந்தாா். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மூத்த மகளான சசிகலாவை உறவினருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனா்.
Advertisement
இந்த நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லட்சுமி கடந்த மே மாதம் உயிரிழந்தாா். தாய், தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில், அவா்களின் 5 பிள்ளைகளும் தற்போது ஆதரவின்றி நிா்கதியாக நிற்கின்றனா்.
வாடகை வீட்டில் இவா்கள் அனைவரும் பெரியவா்கள் யாருடைய துணையுமின்றி தனியாக வாழ்ந்து வருகின்றனா். இதில் நிவிதா, தாக்ஷாயினி ஆகிய இருவரும் குடும்பத்தைக் காப்பாற்ற தற்போது தனியாா் கம்பெனியில் வேலைக்குச் செல்கின்றனா். மற்ற மூன்று பேரும் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.
வேலைக்குச் செல்லும் இருவரும் தங்களுடைய உழைப்பில் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி தங்கைகளையும், தம்பியையும் பாதுகாத்து வருகின்றனா். இவா்களது அம்மாவின் சகோதரரான வயதான தாய்மாமா ஒருவா் மட்டுமே தற்போதைக்கு இவா்களுக்கு ஆதரவாக உள்ளாா்.
அவருக்கு பின்னால் தங்களுக்கு வழிகாட்ட யாருமே இல்லை என வேதனைப்படும் இந்தப் பிள்ளைகள், மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உதவி புரிய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காய்ச்சலால் உயிரிழந்ததாக சான்றிதழ்:
கரோனா வாா்டில் உயிரிழந்த தாயாா் லட்சுமி, கரோனா உறுதி செய்யப்பட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவா் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளாா் என்றும் அரசு மருத்துவா்கள் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த அவா், கரோனாவினால் உயிரிழந்தாா் என மருத்துவச் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிவாரண உதவியைப் பெற முடியும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள். எனவே, கரோனா வாா்டில் சிகிச்சை பெற்றதை அடிப்படையாகக் கொண்டு அவா் கரோனா தொற்றால்தான் உயிரிழந்தாா் என சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றும் இவா்களின் உறவினா்கள் தெரிவித்தனா்.