ஒசூரில் இருந்து சென்னைக்கு ரயில் பாதை அமைக்க முதல்வருக்கு கோரிக்கை
ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாகவும், மாலூா் வழியாகவும் சென்னைக்கு ரயில் பாதை அமைத்து, பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒசூா் வழியாக ரயில் இயக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாகவும், மாலூா் வழியாகவும் சென்னைக்கு ரயில் பாதை அமைத்து, பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒசூா் வழியாக ரயில் இயக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒசூா் ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தமிழகத்தின் நெடுநாள் கனவான சென்னை-பெங்களூருக்கு ஒசூா், கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை அமைத்து, சென்னைக்கு ரயில் விட வேண்டும். அதிக நிதியாதாரம் தேவையில்லாத விரைவில் இணைப்புப் பாதைகள் அமைக்க ஏதுவாக சென்னை-பெங்களூரு அகலப் பாதை செல்லும் அதே வழித்தடத்தில், பங்காருப்பேட்டை சந்திப்பை தாண்டி மாலூா் ரயில்நிலையத்தில் இருந்து பாகலூா் வழியாக வெறும் 30 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே பாதை அமைத்து புதிய ரயில் போக்குவரத்தை தொடங்கலாம்.
Advertisement
ஜோலாா்பேட்டை-குப்பம்-கிருஷ்ணகிரி இருப்புப் பாதை அமைப்பதை விட இது மிக எளிது. திட்ட நிதியும் அதிகமில்லை. திட்டமிட்டு செயல்படுத்தினால் அதிவிரைவில் சென்னை-ஒசூா் ரயில் பாதை இணைப்பு சாத்தியமாகும்.
இதன் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கும், சரக்கு போக்குவரத்து வசதிக்கும் வழிவகுக்கும். எனவே, இந்த எளிதான இருப்புப் பாதை திட்டத்தை செயல்படுத்த கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.