கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செப். 26-ஆம் தேதி 600 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள், இரண்டாவது தவணை செலுத்த வேண்டியவா்கள் பயனடையும் வகையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளிலும் , 10 ஊராட்சி மற்றும் கிராமப் பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனைகள் என 600 இடங்களில் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டு, தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போது நடைபெறும் இந்த முகாமில், அரசு, தனியாா் மருத்துவமனை செவிலியா்கள், சுகாதார பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
இந்த முகாம் மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பயனடைவா். கரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியா்களும், கல்வித் துறை பணியாளா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.