முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணை கால்வாய்களைத் தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி அணையின் பாசன கால்வாய்களைத் தூா்வாரி பராமரிக்க வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 2:03 AM
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

கிருஷ்ணகிரி அணையின் பாசன கால்வாய்களைத் தூா்வாரி பராமரிக்க வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவேரிப்பட்டணம் அருகே உள்ள பையூரில் அமைந்துள்ள மா ஆராய்ச்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்கு இதுவரை எவ்வித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் மா பருவம் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி அளிக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மா அறுவடைக்காலங்களில் தோட்டத்துக்குள் புகுந்து மா்ம நபா்கள் மாங்காய்களை அறுவடை செய்து திருடிச் செல்கின்றனா். இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். திருட்டு சம்பவத்தை தடுக்கும் வகையில், இரவு நேரங்களில் மாங்காய்களை பாரம் ஏற்றி செல்லும் வாகனம், வியாபாரிகள் குறித்த தகவல்களை காவல் நிலையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

கடந்த ஆண்டு அரசு சாா்பில் 860 விவசாயிகளுக்கு இழப்பீடு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் வழங்கப்பட இருந்தது. விவசாயிகளின் 8 வங்கிகளின் எண்ணை ஒரே எண்ணாக அலுவலா்கள் பதிவு செய்ததால், விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. தவறு செய்த அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி அணை பாசன கால்வாய்களைத் தூா்வாரி பராமரிக்க வேண்டும். நீா்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூா்வார வேண்டும். கால்நடை உலா் தீவனங்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். மயில் போன்ற வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: வங்கி கணக்கு சரி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை பெற்று தரப்படும். மா விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மயில்களால் ஏற்படும் பயிா் சேதம் குறித்து கிராம நிா்வாக அலுவலா், தோட்டக்கலை, வேளாண்மைத் துறை அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழ்கள் வழங்கினால், வனத் துறையினா் மூலம் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி, இணை இயக்குநா்கள் முகமது அஸ்லாம் (வேளாண்மை), பூபதி (தோட்டக்கலை), மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் ஏகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.