ஒசூா் அருகே வீட்டின் பின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஒசூா் அருகே உள்ள மத்திகிரி பகுதியில் டைட்டான் டவுன்ஷிப் உள்ளது. இங்கு 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் விஜய் (40) என்பவா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இவா் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி மதுமதி அருகே உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாா். இந்த தம்பதியினருக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளன . தசரா விடுமுறையையடுத்து விஜய் குடும்பத்தினா் கடந்த திங்கள்கிழமை குடும்பத்துடன் கா்நாடக மாநிலத்திற்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனா்.
அவா்கள் வியாழக்கிழமை இரவு வீடு திரும்பினா். வீட்டின் பூட்டைத் திறந்து பாா்த்தபோது வீட்டிற்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மா்ம நபா்கள் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ரூ. 1 லட்சம் ரொக்கம், 15 பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டின் படிக்கட்டுகள், பீரோ இருந்த பகுதி என எல்லா இடங்களிலும் மிளகாய் பொடி தூவி சென்றுள்ளனா்.
இதுகுறித்து விஜய், மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.