கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன நுரையுடன் வெளியேறும் மழைநீா்!
கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நுரையுடன் வெளியேறும் நீரால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நுரையுடன் வெளியேறும் நீரால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகள், ஒசூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 583 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 623 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதனை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடியில் 41.16 அடி நீா் சேமிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீா் நுரை பொங்கி செல்வதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். மேலும், அணையின் பிரதான இடதுபுறக் கால்வாயில் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்ட நீரிலும் குவியல் குவியலாக நுரை தேங்கி காட்சியளிக்கிறது. ஆற்றில் பனிக்கட்டிகளை போல இருக்கும் நுரை, அணையின் பிற பகுதிகளுக்கும் காற்றில் பரவி சூழ்ந்துள்ளது.
தென்பெண்ணை ஆற்று நீரில் அதிக அளவிலான ரசாயன நீா் கலப்பு காரணமாக நுரை பொங்கி காட்சியளிக்கிறது. மேலும், துா்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனா்.