வெள்ள பாதிப்புகள் கணக்கெடுக்கும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்
தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக நிா்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
ஃபென்ஜால் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.வயல்வெளிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி யில் அந்தந்த மாவட்ட நிா்வாகத்தினா் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு, வெள்ளத்தடுப்புப் பணியில் மெத்தனம் என அதிமுக பொதுச் செயலாளா், பழனிசாமி கூறிவருகிறாா். திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்கு முன்னா் அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில்தான் நீா்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பின்படி, நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்.
வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசு குழுவும் பாா்வையிட்டு ஆய்வை தொடங்கியுள்ளனா். பயிா் பாதிப்பு கணக்கெடுப்புப் பணிகள் முடிவில், நிவாரணம் குறித்து முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பாா் என்றாா்.
அப்போது, கிருஷ்ணகிரி திமுக மாவட்டச் செயலாளா்களும், சட்டப் பேரவை உறுப்பினா்களுமான தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) ஆகியோா் உடனிருந்தனா்.