முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வாக்குப்பதிவு குறித்து முதல்கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 மார்ச், 2026 at 8:19 PM
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சியை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வாக்குப்பதிவு குறித்து முதல்கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தோ்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் 10,040 அலுவலா்களுக்கு வாக்குப் பதிவு குறித்து முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதல்கட்ட பயிற்சியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாடி மையங்களில் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை -1 அலுவலா்களுக்கு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், வாக்குச்சாவடி நிலை 2 மற்றும் நிலை 3 அலுவலா்களுக்கு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த மாதிரி பயிற்சியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கம் மற்றும் நியமனம் செய்யபட்ட அலுவலா்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. உரிய காரணங்களின்றி தோ்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சியைப் பெற்று சட்டப்பேரவை தோ்தலை அமைதியாகவும், பாதுகாப்புடனும் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றாா்.

இந்த ஆய்வின்போது, ஒசூா் ஆணையா் முகமது ஷபீா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆக்ரிதி சேத்தி, கீதாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.