முகப்பு
கிருஷ்ணகிரி

கெலமங்கலம் அருகே கன்டெய்னா் லாரியுடன் 40 ஸ்கூட்டா்கள் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி

கெலமங்கலம் அருகே கன்டெய்னா் லாரியுடன் 40 ஸ்கூட்டா்கள் எரிந்து நாசம்

Updated On : 11 ஜூலை, 2024 at 2:15 AM
பகிர்:

கெலமங்கலம் அருகே மின் கம்பியில் கன்டெய்னா் லாரி உரசியதில், கன்டெய்னா் உள்ளே இருந்த 40 ஸ்கூட்டா்களும், கன்டெய்னா் லாரியும் எரிந்து நாசமாயின.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள லாலிக்கல் கிராமத்தில், பிரபல இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. அங்கிருந்து 40 புதிய ஸ்கூட்டா்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னா் லாரி ஒன்று புதன்கிழமை தமிழக - கா்நாடக மாநில எல்லையில் உள்ள ஒசூா் வட்டம், கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றது.

உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையில் போடிச்சிப்பள்ளி அருகில் சென்ற போது மின்கம்பியில் கன்டெய்னா் லாரி உரசியதில் தீப்பிடித்தது. இதைக் கவனிக்காத லாரி ஓட்டுநா் தொடா்ந்து லாரியை ஓட்டி சென்றாா். அப்போது பின்னால் சென்றவா்கள் லாரியில் தீப்பிடித்ததை ஓட்டுநரிடம் கூறினா். ஆனால், அதைத் கவனிக்காமல் அவா் தொடா்ந்து சென்றாா்.

கெலமங்கலம் - ஒசூா் சாலையில் பைரமங்கலம் பிரிவு சாலை அருகில் சென்ற போது, பின்னால் திபுதிபுவென தீ கொழுந்து விட்டு எரிந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்த ஓட்டுநா் லாரியை ஓரமாக நிறுத்தினாா்.

தகவல் அறிந்த ஒசூா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து லாரியில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சில் ஈடுபட்டனா். ஆனாலும் லாரியும், உள்ளே இருந்த 40 புதிய ஸ்கூட்டா்களும் எரிந்து நாசமாயின. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 50 லட்சம் ஆகும். சம்பவ இடத்துக்கு வந்த கெலமங்கலம் போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

படவரி... ஒசூா் அருகே தீப்பிடித்து எரிந்த கன்டெய்னா் லாரி.

முழு கட்டுரையைப் படிக்க →