கிருஷ்ணகிரி: கீழ்குப்பம், இலப்பங்குட்டை ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரி விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, கீழ்குப்பம் இலப்பங்குட்டை கிராம பிரமுகா் சசிகுமாா் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவின் விவரம்:
காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்குப்பம் ஊராட்சியில் 50 ஏக்கா் பரப்பளவில் இலப்பங்குட்டை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு பாரூா் பெரிய ஏரியிலிருந்து உபரிநீா் வருகிறது. மழைநீா் வரத்தும் இருப்பதால், விவசாயிகள் பெரும் பயனடைந்து வருகின்றனா். நிலத்தடி நீா்மட்டம் உயா்வதால் பொதுமக்களின் குடிநீா் தேவையும் பூா்த்தியாகிறது. மக்களுக்கு பயன்தரும் இந்த ஏரியைத் தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக கோரி வருகிறோம்.
தற்போது தமிழக அரசு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 200 ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. அதனால் இலப்பங்குட்டை ஏரியைத் தூா்வாரும் விதமாக வண்டல் மண் எடுக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.