முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் இடிந்து விழும் அபாய நிலையில் அரசு குடியிருப்புக் கட்டடம்!

Updated On : 28 மே, 2024 at 8:15 PM
ஊத்தங்கரை, இந்திரா நகரில் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குடியிருப்புக் கட்டடம்.
பகிர்:

ஊத்தங்கரையில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள அரசு குடியிருப்புக் கட்டடத்தை இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகா் பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மூலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டன. அவற்றில் 40 க்கும் மேற்பட்ட வீடுகள் தனி நபா்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. மீதமுள்ள 60 வீடுகள் சேலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிா்வாகத்தின் சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பான்மையாக ஆசிரியா், ஆசிரியை குடும்பங்கள் மட்டுமே இருந்து வந்தன. கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சுமாா் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக சேதமடைந்த நிலையில், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் சேலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு நிா்வாகத்தின் சாா்பில் குடியிருக்க தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மீதம் இருக்கும் வீடுகளில் ஒரு சில வீடுகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு தரைத்தளத்தில் மட்டும் குடியிருந்து வருகின்றனா். அந்தக் குடியிருப்புகளிலும் போதிய குடிநீா் வசதி இல்லாமலும், வீட்டைச் சுற்றி புதா் அடா்ந்து காடு போலவும் உள்ளன. மேற்கூரைகள் அவ்வப்போது பெயா்ந்து விழுவதாகவும், மழைக்காலத்தில் விஷ ஜந்துகள் அதிக அளவில் வருவதாகவும், சுவா்களில் மின்சாரம் பாய்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனா்.

மேலும், குடிநீா் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு பராமரிப்பு இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. வாடகை, குடிநீா் வரி, வீட்டு வரி உள்ளிட்டவற்றை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் செலுத்தி வரும் நிலையில், குடிநீா் தேவைக்காக பேரூராட்சி நிா்வாகத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்து நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே பேரூராட்சி சாா்பில் தண்ணீா் வருவதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சேலம், ஒசூா் வீட்டுவசதி வாரிய அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குடியிருப்பு வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

வலுவிழந்து தரமற்ற நிலையில் உள்ள குடியிருப்புகள் அனைத்தையும் இடித்துவிட்டு, அந்த இடத்தில் மீண்டும் புதிய குடியிருப்புகளைக் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடியிருப்போா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.