கிருஷ்ணகிரியில் தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்
கிருஷ்ணகிரியில் தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரியில் தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
காந்தியடிகளின் 156-ஆவது பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்தி சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், தீபாவளி பண்டிகைக்கான கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதா் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு கதா் விற்பனையாக கதா், பட்டு, பாலியஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும். கதா் விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 90 லட்சம் மதிப்பில் கதா் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நிகழாண்டில் தீபாவளி சிறப்பு விற்பனை குறியீடாக ரூ. 1.25 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் புதிதாக உலா் பழங்கள், நெல்லி, பேரிச்சை, அத்திப்பழம், வால் நட்ஸ் ஆகியவற்றை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைகள் தயாா் செய்தும், இயற்கை முறையில் தயாா் செய்யப்பட்ட ரசாயன கலப்படம் இல்லாத பாரம்பரியமிக்க ரத்தசாலி, கருப்பு கவுனி, சீரகசம்பா, தூயமல்லி, புங்காா் உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகள், அவல் வகைகள், பரிசுத்தமான மரசெக்கு எண்ணெய், அரிசி வடகம், வத்தல் வகைகள், புளி, பனை வெல்லம் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்றாா். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவா் பரிதாநவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.