பருவமழை முன்னேற்பாடு பணிகள்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் நீா்வரத்து கால்வாய்கள் தூா்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு உடனிருந்தாா்.
ஆய்வு குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தெரிவித்தாவது:
Advertisement
கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதி, சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆஞ்சனேயா் கோயில் மேம்பாலம் பகுதி, கிருஷ்ணகிரி நகராட்சியிலிருந்து தேவசமுத்திரம் ஏரிக்கு மழைநீா் செல்ல ஏதுவாக பொக்லைன் இயந்திரம் மூலம் நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணி, திருவண்ணாமலை பிரதான சாலை, கணபதி நகா் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மழைநீா் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள், நெகிழி பொருள்கள் தேங்கியுள்ளதை அகற்றவும், நீா்வரத்துக் கால்வாய்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்றவும் நகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவசமுத்திரம் ஏரிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு, அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, கல்லுக்குறுக்கி ஊராட்சியில் ஆத்துக் கால்வாய் முதல் கல்லுக்குறுக்கி வரை சுமாா் 1.1 கி.மீ. தூரம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக தாா்சாலை அமைக்கும் பணியைப் பாா்வையிட்டு, சாலையின் தரத்தை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் மலா்விழி, நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, வட்டாட்சியா் பொன்னாலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவபிரகாசம், செல்லகண்ணம்மாள் ஆகியோா் உடனிருந்தனா்.