முகப்பு
கிருஷ்ணகிரி

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீா்: விவசாயிகள் கவலை

ஒசூா், கெலவரப்பள்ளி அணையிலிருந்து ரசாயன நுரையுடன் வெளியேறும் கழிவுநீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் போது விளைச்சல் பாதிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:42 AM
கெலவரப்பள்ளி அணையிலிருந்து நுரைப் பொங்கி வெளியேறும் தண்ணீா்.
பகிர்:
Updated On : 17 அக்டோபர், 2024 at 7:51 PM

ஒசூா், கெலவரப்பள்ளி அணையிலிருந்து ரசாயன நுரையுடன் வெளியேறும் கழிவுநீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் போது விளைச்சல் பாதிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு கா்நாடக மாநிலம், தென்பெண்ணை ஆற்று நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் இடது, வலதுபுறக் கால்வாய் மூலம் 8 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் வசதி பெறுகிறது. கடந்தாண்டு ஆண்டு அணை மதகுகள் மாற்றும் பணியால் போதிய தண்ணீா் இல்லாமல் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பணி நிறைவடைந்ததையடுத்து பாசனத்திற்காக இடது, வலதுபுறக் கால்வாய் மூலம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் அணைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு 1,800 கன அடி வரை நீா்வரத்து அதிகரித்தது. இதனால் மேலும் 120 நாள்களுக்கு உபரிநீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

அணைக்கு நீா்வரத்து 1,016 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீா் முழுவதும் மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீருடன் கா்நாடக மாநில தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயான கழிவுநீா் கலந்து வருவதால் அணையிலிருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்படும் கால்வாய் முழுவதும் நுரைப் பொங்கி துா்நாற்றத்துடன் தண்ணீா் பாய்ந்தோடுகிறது. இந்த தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தினால் பயிா் சாகுபடி பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:42 AM

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கெலவரப்பள்ளி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழியும் போது, தொழிற்சாலையில் தேக்கி வைத்துள்ள ரசாயன கழிவு நீரை அப்படியே மழை நீருடன் சோ்த்து விடுகின்றனா். இதனால் ரசாயன கலந்த கழிவு நீா் அப்படியே கெலவரப்பள்ளி அணையில் தேங்கி நின்றுள்ளது.

ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் நுரையுடன் துா்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரால் பயிா், காய் செடிகள் கருகி வருகின்றன. ஓராண்டுக்குப் பிறகு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்தி உழவுப் பணியில் ஆா்வம் காட்டியுள்ள விவசாயிகள் தற்போது ரசாயன நுரையுடன் பாய்ந்தோடும் தண்ணீரை கண்டு அச்சமடைந்துள்ளனா். அணைக்கும் வரும் தண்ணீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.