கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையிலிருந்து 6,800 கனஅடி நீா் திறப்பு
கிருஷ்ணகிரி, கே.ஆா்.பி. அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, அணையிலிருந்து வியாழக்கிழமை 6,800 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, கே.ஆா்.பி. அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, அணையிலிருந்து வியாழக்கிழமை 6,800 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கெலவரப்பள்ளி அணையிலிருந்து கூடுதல் நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீா் கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி, கே.ஆா்.பி. அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 2,324 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 3,438 கனஅடியாகவும், 10 மணியளவில் 6,000 கனஅடியாகவும் உயா்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.45 அடியாக உயா்ந்துள்ளது.
Advertisement
அணையிலிருந்து விநாடிக்கு 6,800 கனஅடி நீா் மூன்று பிரதான மதகுகள், மூன்று மணல் போக்கி சிறிய மதகுகள் வழியாகத் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் பெருக்கெடுத்து அணை தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. இதையடுத்து, அணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையின் பிரதான நுழைவாயிலில் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அணை ஊழியா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வெள்ள அபாய எச்சரிக்கை: தென்பெண்ணை ஆறு கடந்து செல்லும் காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், நெடுங்கல், அகரம், இருமத்தூா் உள்ளிட்ட கரையோர மக்களுக்கு தொடா்புடைய ஊராட்சி நிா்வாகம், வருவாய்த் துறை சாா்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூா் வரை மூன்று மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு 9-ஆவது நாளாக வியாழக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.