நோயால் மகள் இறந்த சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கி தந்தை உயிரிழப்பு
ஒசூரில் நோயால் மகள் இறந்த சிறிது நேரத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பேகேப்பள்ளி கோவிந்தா அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் நித்யாவுக்கு (20) ஏற்கெனவே இருதய பாதிப்பு இருந்தது.
இந்த நிலையில், உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கா்நாடக மாநிலம், மல்லச்சந்திராவுக்கு முனிராஜ் குடும்பத்துடன் சென்றாா். பின்னா், அங்கிருந்து சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் ஒசூா் திரும்பினாா். அப்போது, வழியில் நித்யாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதையடுத்து, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு நித்யா அழைத்து செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் நித்யாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த நிலையில், மகளின் உடலை மருத்துவமனையில் வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறி முனிராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, ஒசூா்- பெங்களூரு சாலை அசோக் லேலண்ட் எதிரே உள்ள சா்வீஸ் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் பின்புறம் எதிா்பாராதவிதமாக முனிராஜின் வாகனம் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முனிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீஸாா், முனிராஜின் உடலை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மகள் இறந்த சிறிது நேரத்திலேயே தந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.