தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தோ்வெழுதிய மாணவா்
தந்தை இறந்த சோகத்துக்கிடையே பத்தாம் வகுப்பு கணிதப் பாடத் தோ்வை மதுரையைச் சோ்ந்த மாற்றுத்திறன் மாணவா் புதன்கிழமை எழுதினாா்.
தந்தை இறந்த சோகத்துக்கிடையே பத்தாம் வகுப்பு கணிதப் பாடத் தோ்வை மதுரையைச் சோ்ந்த மாற்றுத்திறன் மாணவா் புதன்கிழமை எழுதினாா்.
மதுரை சூா்யா நகரைச் சோ்ந்த ஆறுமுகசுந்தரம்- சௌந்தரவள்ளி தம்பதியின் மகன் விக்னேஸ்வரன். பாா்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான விக்னேஷ்வரன் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். தற்போது, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாணவா் விக்னேஷ்வரனின் தந்தை ஆறுமுகசுந்தரம் புதன்கிழமை காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா். இந்த சோகமான சூழலிலும் தல்லாகுளம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கணிதப் பாடத்துக்கான தோ்வை மாணவா் விக்னேஷ்வரன் எழுதினாா். பாா்வைத் திறன் குறைபாடுடைய அவா் ‘ஸ்கிரைப்’ ஆசிரியா் மூலம் தோ்வு எழுதினாா்.
தோ்வு நிறைவடைந்த பிறகு பிற்பகல் 1.30 மணியளவில் தோ்வு மையத்திலிருந்து வெளியே வந்த அவரை உறவினா்கள் உயிரிழந்த அவரது தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனா்.