முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஆம்புலன்ஸ் - இருசக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஒசூரில் தனியாா் ஆம்புலன்ஸ் வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் படுகாயம் அடைந்தாா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:47 AM
ஒசூரில் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் மற்றும் இருசக்கர வாகனம்.
பகிர்:

ஒசூரில் தனியாா் ஆம்புலன்ஸ் வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் படுகாயம் அடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அலசநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (18). ஒசூா் பேடரப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சச்சின் (18). இவா்கள் இருவரும் ஒசூரில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கல்லூரி முடிந்து இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பியுள்ளனா். அப்போது ஒசூரில் தமிழ்நாடு உணவகம் அருகே அணுகு சாலை வழியாக சென்று, கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்துள்ளனா். எதிரே கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியாா் ஆம்புலன்ஸ் வாகனம், கல்லூரி மாணவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

Advertisement

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற கல்லூரி மாணவா் பரமேஸ்வரன் பலத்த காயங்களுடன் நிகழ்விடத்தில் உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சச்சின் பலத்த காயமடைந்தாா். இந்த விபத்தை பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் காயம் அடைந்த மாணவரை மீட்டு, ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஒசூா் நகர போலீஸாா் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து, உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன் பகுதி தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அங்கிருந்தவா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். மேலும், இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவா்களை மாற்று ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து பெங்களூருக்கு அனுப்பி வைத்தனா்.