கிருஷ்ணகிரி அருகே காட்டுயானை தாக்கியதில் இருவா் காயம்
கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னமட்டாரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
கிருஷ்ணகிரி அருகே காட்டுயானை தாக்கியதில் பழங்குடியினா் இருவா் பலத்த காயம் அடைந்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள வனப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக 12-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள், அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து வெளியேறி, வேளாண் பயிா்களைச் சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், மனிதா்களை தாக்கிக் கொல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த சின்னமட்டாரப்பள்ளி அருகே கீழ்பூங்குருத்தி கிராமத்தைச் சோ்ந்த கொண்டப்பன் (70), கனகப்பன் (65) ஆகியோா் தேநீா் அருந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்து சென்றனா். அப்போது, அங்குள்ள பாலம் அருகே நின்றுகொண்டிருந்த ஒற்றை காட்டுயானை, இருவரையும் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்தவா்களின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள், யானையை விரட்டி, காயம் அடைந்த இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா்.
யானை தாக்கி இருவா் பலத்த காயம் அடைந்த நிலையில், வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியேறாமல் இருக்க அகழி, சூரிய மின்வேலி போன்றவற்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னமட்டாரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த நிகழ்விடத்திற்கு வந்த பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் தனசேகரன், கிருஷ்ணகிரி வனச்சரகா் முனியப்பன் உள்ளிட்டோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எழுத்துபூா்வமான உறுதிமொழியை அளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்டோா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.