ஓட்டுநர் உரிமத்துக்கானகல்வித் தகுதியை தளர்த்தக் கோரிக்கை
ஓட்டுநர் பற்றாக்குறையால் சரக்கு போக்குவரத்துத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமத்துக்கான கல்வித் தகுதியை தளர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஓட்டுநர் பற்றாக்குறையால் சரக்கு போக்குவரத்துத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமத்துக்கான கல்வித் தகுதியை தளர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்தச் சங்கத்தின் தலைவர் கே.நல்லதம்பி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியால் ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 30 சத லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்தப் பாதிப்பை அடுத்து, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கல்வித் தகுதியை தளர்த்துவதாக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. ஓட்டுநர் பற்றாக்குறையால் சரக்குப் போக்குவரத்துத் தொழிலுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமத்துக்கான கல்வித் தகுதியை அரசு விரைவில் தளர்த்திட வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் ஓட்டுநர்களையும் இணைத்து அவர்களின் குடும்பத்துக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் கிடைக்கச் செய்ததற்காகவும், கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களால் உயிரிழந்த திண்டிவனத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பன்னீர்செல்வம், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்கர் ஆகியோரது குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கியதற்காகவும், தமிழகத்தில் பல ஊர்களில் செயல்பட்டு வரும் பகுதி அலுவலகங்களை வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தியதுடன் பகுதி அலுவலகம் இல்லாத ஊர்களில் புதிதாக பகுதி அலுவலகம் ஏற்படுத்தியதற்காகவும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.