கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள கலவரத்தால் நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 15 கோடி மதிப்பிலான தேங்காய் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்றுமதியாளர்கள், வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் தனித்தனியாக தேங்காய் கிடங்குகள் வைத்துள்ளனர். இந்தக் கிடங்குகளுக்கு நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து தினமும் லட்சக்கணக்கான தேங்காய்கள் கொண்டு வரப்படுகின்றன.
பின்னர் இக்கிடங்குகளில் தேங்காய்கள் உரிக்கப்பட்டு தரம் வாரியாக சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு ஒரு லாரியில் சுமார் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தேங்காய்கள் ஏற்றப்படுகின்றன.
தினமும் பரமத்திவேலூர் உள்பட நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 40-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் வட மாநிலங்களுக்கு தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதில் இங்கிருந்து கர்நாடக மாநிலம் வழியாக வடமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகளே அதிகம்.
தற்போது காவிரி நீர் விவகாரம் கர்நாடகத்தில் கலவரமாக வெடித்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
இதன் காரணமாக கர்நாடகம் வழியாகச் செல்ல வேண்டிய தேங்காய் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால், ரூ. 15 கோடி மதிப்பிலான தேங்காய் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.