ஒப்பந்தாரர் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாமக்கல் ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கே.ஆர்.சுப்ரமணியம் (58). அரசு கட்டட ஒப்பந்ததாரர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த மாதம் 7ஆம் தேதி வருமானவரித் துறை சோதனை நடந்தபோது, அவரது நண்பர் என்ற முறையில் சுப்ரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந் நிலையில், கடந்த 8ஆம் தேதி அவர் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சத்தியமூர்த்தி நாமக்கல்லில் முகாமிட்டு, செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள சுப்ரமணியத்துக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினார்.
பின்னர் சென்னை திரும்பிய அவர், இரண்டாம் கட்ட விசாரணையை வியாழக்கிழமை தொடங்கினார். இதையொட்டி ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பண்ணை வீட்டுக்கு மீண்டும் சென்று அங்கு பணியாற்றிவரும் நபர்களிடம் இரண்டாவது முறையாக விசாரித்தார்.
மேலும் சுப்ரமணியத்தின் நண்பர்கள் சிலரையும் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகம் வரவழைத்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி வெள்ளிக்கிழமை நாமக்கல் வர இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது தலைமையிலான குழுவினர் நாமக்கல் ஆசிரியர் குடியிருப்பில் உள்ள சுப்ரமணியம் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த விசாரணையின் போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுப்ரமணியம் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது தானா என்பதை உறுதி செய்ய உள்ளனர். அந்த விசாரணைக்கு பிறகு தான் சுப்ரமணியம் எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் உண்மை தன்மை தெரியவரும் என காவல் துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.