நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் கேசவன் தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். நாக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவைத் தலைவர் டி.எம். மோகன் பேசினார்.
விழாவில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் அரசு பரமேசுவரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சுதந்திரத்துக்காகப் போராடி இன்னுயிர் நீத்த சுப்ரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் பற்றி எடுத்துக்கூறி மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற எவ்வாறு பாடுபடவேண்டும் என்பது குறித்துப் பேசினார்.
தேசத் தலைவர்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருக்குறள் பேரவைத் தலைவர் சுப்பிரமணியன், திருக்குறள் ராசா, கே.வி கணேசன், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவைச் செயலர் செல்வ செந்தில்குமார் நன்றி கூறினார்.