பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கியும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை சார்பில் போர்க்கால நடவடிக்கையாக, மருத்துவ சிகிச்சை அளித்து வந்தாலும், பொதுமக்கள் விழிப்புடன் தன் சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி தலைமையிலான திமுகவினர் பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கியும், பயணிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினரிடம் டெங்கு காய்ச்சால் வராமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
இதில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரதாப் சக்கரவர்த்தி, சுந்தர், வேலூர் நகரச் செயலர் மாரப்பன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.