நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த வீடுகள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமான பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.
இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிபாளையம் அருகே கோரப்பாளையூரில் உள்ள குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் விசைத்தறிக் கூடங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
வளாகத்தை தூய்மையாக பராமரிக்காமல், கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான கழிவுப் பொருள்களை அகற்றாமல் இருந்த 2 ஆலை உரிமையாளர்களுக்கு ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் கோ. ரமேஷ் குமார் கூறியதாவது:
கடந்த ஒரு வாரத்தில் மாவட்டம் முழுவதும் வீடுகள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு நடத்தினர். அப்போது தங்கள் பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளாத, வீடுகள், கல்வி மற்றும் தனியார் நிறுவனங்கள் என 2,107 பேருக்கு அறிவிக்கை அளிக்கப்பட்டது.
மேலும் பலமுறை அறிவிக்கை கொடுத்தும், சுகாதாரத்தை பேணாத கல்வி, தனியார் நிறுவனம் மற்றும் வீடுகளுக்கு ரூ. 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது என்றார்.