வேளாண்மை துறை சார்ந்த செயல்பாடுகளை அறிய உழவன் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறலாம் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மின்னணு வேளாண்மையில் தமிழகம் அகில இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழக அரசின் வேளாண்மை துறையினால் 2010ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்குவதற்காக இணையதளம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தேசிய அளவில் முதல் முறையாக 70 லட்சம் விவசாயிகள் அடிப்படை தகவல்கள், பண்ணை மற்றும் மண்வளம் சார்ந்த தகவல்கள் வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு, அதற்கான ஆலோசனைகள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இந்த துறையினால் வழங்கப்பட்டு வருகிறது.
வேளாண்மை துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக வேளாண்மை துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளிடம் விரைவில் சென்றடைவதற்காக உழவன் என்ற செல்லிடப்பேசி செயலியை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் செயல்படும் விதமாக முதல்வர் அண்மையில் தொடங்கி வைத்தார்.
இந்தச் செயலி மூலம் விவசாயிகளுக்கு 9 முக்கிய அடிப்படை சேவைகள் வழங்கப்படுகிறது. அதாவது, அரசின் வேளாண் மானியத்திட்டங்கள் குறித்த தகவல்கள், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம், விதை இருப்பு விவரம், வேளாண் எந்திரங்கள் வாடகை மையங்கள் விவரம், விளை பொருட்களின் சந்தை விலை, வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், வேளாண் விரிவாக்க பணியாளர்களின் வருகை விவரத்தை அறிந்து கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த உழவன் செல்போன் செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து, விவசாயம், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த தகவல்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
இதுகுறித்த விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அல்லது வேளாண்மை அலுவலர்கள் அல்லது உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகலாம்.