மூதாட்டி கொலை வழக்கில் 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். நகைக்காக 3 பேரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி கங்காணித் தெருவைச் சேர்ந்த சண்முகம் மனைவி அமராவதி என்ற மூக்காயி(70). கணவரை இழந்த அவர் மகள் ராஜேஸ்வரி, மகன் சுப்ரமணி ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந் நிலையில், கடந்த 9ஆம் தேதி வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த 4 பவுன் நகை, வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து எருமப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்தின் பேரில், அமராவதி வீட்டின் அருகே வசித்து வரும் ஜோதி(31) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அப் பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் தேவிகா(34), மலையாளி என்பவரின் மனைவி பூங்கோதை (35) ஆகியோருடன் சேர்ந்து மூதாட்டி அமராவதியை கொலை செய்து, நகைகளை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து, ஜோதி, தேவிகா, பூங்கோதை ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 14 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.