பார்வையற்றவர்களுக்கான உதவித்தொகையை ரூ. 3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராசிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நல்வாழ்வு பார்வையற்றோர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்வையற்றவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 உதவிதொகையை ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும். மேலும் அந்தத் தொகையை 7-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும், அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
நகராட்சி மூலம் வசூலிக்கப்படும் வரிகளில் வீட்டு வரியை தவிர தொழில் வரி, பாதாள சாக்கடை வரி, தண்ணீர் வரி மற்றும் நூலக வரி ஆகியவற்றை பார்வையற்றவர்களுக்கு ரத்து செய்ய வேண்டும். அரசு மூலம் நடத்தப்படும் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூப்புபடி பணி வழங்க வேண்டும்.
வங்கிகளில் ஜாமீன் இன்றி பார்வை இல்லாதவர்களுக்கு கடன் வழங்க வேண்டும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்த 4 சதவீத வேலைவாய்ப்பைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பார்வையற்றவர்கள் பயணம் மேற்கொள்ளும் விதத்தில், இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.