மதுபோதையில் முதியவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் என். நேரு (60). இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி காலை ஆனங்கூர் பிரிவு சாலையில் உள்ள மூங்கில் கடை முன் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வெப்படை உப்புபாளையத்தைச் சேர்ந்த ஏ. தனபால் (31), குமாரபாளையம் சுந்தரம் காலனியைச் சேர்ந்த டி. சோமசுந்தரம் (31) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நேரு அடித்துக் கொலை செய்யப்பட்ட விவரம்
தெரியவந்தது.
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி இளங்கோ முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்படி குற்றம்சாட்டப்பட்ட தனபால், சோமசுந்தரம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.