பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் ஏலச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.1,000-க்கு ஏலம் போனது. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் காவிரி கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்திற்கு 800 வாழைத்தார்கள் மட்டுமே விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும்,பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் ஏலம் போயின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.1,000-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.550-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.600-க்கும் ஏலம் போயின.
மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாகவும், வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.