திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளுக்கு ரூ. 400 கோடியில் தனிக்கூட்டுக் குடிநீர்த் திட்டம்: அமைச்சர் தங்கமணி பேச்சு
திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளுக்குத் தனிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ 400 கோடியில் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளுக்குத் தனிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ 400 கோடியில் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன். சரஸ்வதி முன்னிலை வகித்தார். விழாக்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி கலந்து கொண்டு 430 பயனாளிகளுக்கு ரூ. 84 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், 344 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனத்தையும் வழங்கிப் பேசியதாவது:
திருச்செங்கோடு தொகுதியில் 344 மகளிருக்கும், சேந்தமங்கலம் தொகுதியில் 105 மகளிருக்கும் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
சங்ககிரி சாலையை மேம்படுத்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். திருச்செங்கோடு முதல் ஓமலூர் வரை சாலை நீட்டித்து தருவதாகவும், ரயில்வே மேம்பாலத்தை அமைத்து தருவதாகவும் கூறியுள்ளார்.
திருச்செங்கோடு-குமாரபாளையம் தொகுதிக்கு தனிக்கூட்டு குடிநீர் திட்டத்துக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு குடிநீர் பிரச்னையைக் குறைத்திட திருச்செங்கோடு தொகுதிக்கும், குமாரபாளையம் தொகுதிக்கும் ரூ. 400 கோடிக்கு ஒப்பந்தம் விட்டு இன்னும் ஒருமாத காலத்திற்குள் பூமி பூஜை செய்யப்படவுள்ளது. இப் பணி ஒரு ஆண்டு காலத்துக்குள் நிறைவடைந்து குடிநீர் பிரச்னை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.
அதே போல நகராட்சி பகுதிகளுக்கும் ரூ. 60 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, அப்பணியும் ஒரு ஆண்டு காலத்திற்குள் முடிவுற்று திருச்செங்கோடு-குமாரபாளையம் தொகுதியில் வருங்காலத்தில் குடிநீர் பிரச்னை இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாசியர் வே. பாஸ்கரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் இரா. மணி, தனித்துணை ஆட்சியர் சமூகப் பாதுகாப்புத் திட்டம் எம்.துரை, திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் எம்.சுப்பிரமணியம் உள்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.