கிராம ஊராட்சி செயலர் காலி பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 29 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு 18 வயது பூர்த்தியடைந்த எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். இப் பதவிக்கு வரும் ஜூலை 1 ஆம் தேதி அன்று பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு மேற்படாதவராகவும், பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், இப் பணிக்கு விண்ணப்பிப்போர் ஊராட்சி செயலாளர் பணி காலியாக உள்ள கிராம ஊராட்சியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் அந்த கிராம ஊராட்சியில் இல்லாதபட்சத்தில், அதே ஊராட்சி ஒன்றியத்தின் அந்த கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கிராம ஊராட்சியைச் சார்ந்தவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும்.
காலியிடங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட இனச் சுழற்சி முறை, மாதிரி விண்ணப்பப் படிவம் உட்பட இதர விவரங்கள் அந்தந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு நேரிலோ, பதிவஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்குப் பின்னர் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை
அனுப்பப்படும்.