ரெளடியை கொலை செய்ய முயன்ற வழக்கு: 3 பேர் கைது
ரெளடியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய 3 பேரை நாமக்கல் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் ஒருவர் நாமக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ரெளடியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய 3 பேரை நாமக்கல் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் ஒருவர் நாமக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நாமக்கல் மாரிகங்கானித் தெருவைச் சேர்ந்தவர் காசி என்ற காசிராஜன்(29). இவர் மீது நாமக்கல் காவல் நிலையத்தில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந் நிலையில் கடந்த 11ஆம் தேதி இரவு நாமக்கல்- திருச்சி சாலை எஸ்கே நகரில் காசிராஜனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி தலைமறைவாகினர். இதில் படுகாயமடைந்த காசிராஜன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு 3 தனிப்படைகளை அமைத்தார். தனிப்படை போலீஸார் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். இதில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த மனோ என்ற மனோகரன், நாமக்கல் ஆர்.பி.புதூரைச் சேர்ந் சேர்ந்த என்.கிருஷ்ணகாந்த்(23), சேந்தமங்கலம் சாலையைச் சேர்ந்த சீனிவாசன் (24) ஆகிய 3 பேரும் காசிராஜனை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
மதுரையில் பதுங்கியிருந்த மூவரையும் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த வீரா என்ற வீரக்குமார்(32), நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.