பரமத்திவேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பரமத்தி வேலூர் வட்டாரத் தலைவர் முத்துரங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பட்டாபிராமன், பொருளாளர் அர்த்தனாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு 21 மாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமாக ரூ. 9,000 வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படியாக ரூ. 1,000 வழங்க வேண்டும். மேலும் நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறுதிமொழியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ஜெயனூலாதின் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.