தெருநாய்கள் பிடிக்கும் பணி
குமாரபாளையம் நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு இனப்பெருக்கத் தடை
குமாரபாளையம் நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்வதற்காகப் பிடிக்கும் பணி அண்மையில் தொடங்கியது.
குமாரபாளையம் நகரிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 497 தெருநாய்கள் சுற்றித் திரிவதாக கால்நடைத்துறை சார்பில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களைத் துரத்துவது, கடித்து காயப்படுத்துதல், வாகனங்களில் குறுக்கே செல்வதால் விபத்துகளை ஏற்படுத்துதள் என பல்வேறு இடையூறைகளை ஏற்படுத்தி வந்தன. மேலும், இனப்பெருக்க காலத்தில் அதிகளவில் நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதனால், தெருநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நாய்களைப் பிடித்து இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தெருநாய்களைப் பிடிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி மேற்பார்வையில் நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் எம்.குமரவேல், சி.செல்வராஜ் உள்ளிட்டோர் பணியினைக் கண்காணித்து வருகின்றனர்.
தெருநாய்களை வாகனத்தில் பிடித்துச் செல்லும் பணியாளர்கள், ஆனங்கூர் பிரிவு அருகேயுள்ள கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர். கடந்த இரு நாள்களில் 90 நாய்கள் பிடிபட்ட நிலையில், பாக்கியுள்ள நாய்களையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிடிபட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்யப்படும். பின்னர், மூன்று நாள்களுக்குப் பின்னர் வெளியே விடப்படும். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் தடுப்பூசி போடப்படுவதோடு, அறுவை சிகிச்சையும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.