பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் இரு சக்கர வாகனம் மோதி, நடந்து சென்ற ஓய்வு பெற்ற பொறியாளர் படுகாயமடைந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் (63). இவர் பொதுப்பணித் துறை குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வியாழக்கிழமை பரமத்தி பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கோபால் (22) வந்த இரு சக்கர வாகனம் மோதியுள்ளது.
இதில் தன்ராஜ் மற்றும் கோபால் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்றி தன்ராஜை கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், கோபாலை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தன்ராஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.