எலச்சிபாளையம் ஒன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கோமதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் சாவித்திரி கலந்துகொண்டு ஒன்றிய புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசினார்.
ஒன்றியத் தலைவராக எம். சத்தியபாமா செயலாளராக எஸ். கோமதி பொருளாளராக ஆர். கலைச்செல்வி துணைத் தலைவராக ஏ. ரஹமத் துணைச் செயலாளராக வி. ஜெயராணி மற்றும் கமிட்டி உறுப்பினராக எஸ். கண்ணகி, லட்சுமி, ராஜேஸ்வரி உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
குமாரமங்கலம் பிரிவு சாலையில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் ஓடை அமைக்க வேண்டும். இப் பகுதியில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எலச்சிபாளையம் சந்தைப்பேட்டை, சத்யா நகர், சின்ன எலச்சிபாளையம், பனங்காடு போன்ற பகுதிகளில்
சாக்கடை கால்வாய்கள் தூர்வார
வேண்டும்.
எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு பொதுக் கழிப்பிட வசதியும், நிழற்கூடமும் ஏற்படுத்தித் தர வேண்டும். கடந்த நான்கு வருடமாக முதியோர் உதவித்தொகைக் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.