எது செய்ய முடியுமோ, அதை மட்டும் சொல்லும் கட்சி மக்கள் நீதி மய்யம் என அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராகப் போட்டியிடும் ஆர்.தங்கவேலை ஆதரித்து அவர் ராசிபுரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியது:
நான் செய்யும் விஷயத்தில் புதுமை செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்யவில்லை. மக்கள்தான் முதல்வர் என்பதைப் புரிந்து கொண்டு நாங்கள் செயல்படுவோம்.
தமிழகத்தை ஒரு தொழில்முனைவு மையமாக மாற்ற பணியாற்ற வேண்டியுள்ளது. நாங்கள் அடுக்குமொழி பேசுவதில்லை. காசு கொடுத்து பேசுவதற்கு ஆள்களை அழைத்து வருவதில்லை. பொய் பேசுவது நமக்கு வேண்டாம். அது போன்றவர்கள் அங்கேயே இருக்கட்டும். சமுதாயத்தில் பெண்கள் தைரியமாக நடந்து செல்ல வேண்டும். அது போன்ற சூழல் இருக்க வேண்டும்.
தற்போது அரசு எதை செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை. எதைச் செய்யக் கூடாதோ, அதைச் செய்கிறது. குறிப்பாக, கல்வி நிறுவனங்கள் தனியாரால் நடத்தப்படுகின்றன. மதுபானக் கடைகள் அரசால் நடத்தப்படுகின்றன. ஏடிஎம் மையங்களை விட, மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகளவில் உள்ளன. 40 ஆண்டுகளாக இருந்து வரும் இது போன்ற நிலையில், மதுவிலக்கை உடனடியாக கொண்டுவர முடியாது. படிப்படியாகத் தான் கொண்டுவர வேண்டும். ஆனால், அரசின் அசட்டையால் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் தத்தளிக்கிறார்கள். இதனை மக்கள் நீதி மய்யம் முதல் பணியாக எடுத்துச் செய்யும்.
விவசாயத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். பன்முக விவசாயம் கற்றுக்கொடுக்க வேண்டும். இதனை மக்கள் நீதி மய்யம் செய்து காண்பிக்கும். தேர்தல் அறிக்கை என்ற பெயரில் கட்சிகள் பட்டியல் இடுகின்றன. இதைத் தான் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். இனி நாம் செய்ய வேண்டியது தமிழகத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டியது. இந்த அற்புதத் தேரை ஊர்கூடி இழுக்க வேண்டும். அதற்கான நாள் தான் ஏப்ரல் 18 என்றார்.
இக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள் எஸ்.மணி, ஜெ.ஜெயபிரகாஷ், கே.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.