கொல்லிமலைக்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா செல்லும் மக்களிடையே, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை, மாவட்ட காவல்துறை, பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம், எவர்கிரின் ரோட்டரி சங்கம், நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி சங்கம், மனவளக்கலை மன்றம் ஆகியவை சார்பில், விபத்தில்லா கொல்லிமலை பயணம் என்ற அடிப்படையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையை சனிக்கிழமை மேற்கொண்டனர்.
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் விபத்தில்லா பயணம் வேண்டி வாழ்த்து தியானம், துண்டுப் பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவை அடிவாரப் பகுதியான காரவள்ளியில் நடைபெற்றது. மனவளக்கலை மன்ற நிர்வாகி உழவன் தங்கவேலு தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்க கிளைத் தலைவர் மருத்துவர் பெ.ரங்கநாதன், செயற்குழு உறுப்பினர் கணேஷ், சேந்தமங்கலம் மனவளக்கலை மன்ற உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.