தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தொகுதி 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்குகிறது என்றும் இந்தப் பயிற்சியில் தேர்வர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1 பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச மாதிரி தேர்வு வகுப்புகள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் வரும் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் தேர்வு அணுகுமுறை குறித்த ஆலோசனை வகுப்புகளும், நுண்ணறிவுப் பகுதிக்கான பயிற்சி வகுப்புகளும், மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் போட்டித்தேர்வு எழுதுவோர் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 222260 என்ற தொலைபேசி எண் அல்லது 7904800126 என்ற செல்லிடபேசி எண்ணில் தொடர்புகொளளலாம் என்றார் ஆட்சியர்.