கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட தம்பதி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி வசந்தி. கட்டனாச்சாம்பட்டியைச் சேர்ந்த வியாபாரியிடம் ரூ.70 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். வட்டியுடன் கடனைச் செலுத்திய நிலையில், மீண்டும் கடனை செலுத்தக்கோரி நிலத்தை அபகரித்துக் கொண்டு கந்துவட்டிக் கொடுமை செய்து வருவதாகவும், இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் கூறினர். மேலும், நிலத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தம்பதியர் திடீரென தர்னாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நல்லிபாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். அதைத் தொடர்ந்து தம்பதி கலைந்து சென்றனர்.