மல்லசமுத்திரத்தில் இரு பிரிவினரிடையே மோதல்: காவல் நிலையம் முற்றுகை
திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் மாமுண்டி கிராமத்தில் இரு பிரிவினரிடையே சனிக்கிழமை மோதல்
திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் மாமுண்டி கிராமத்தில் இரு பிரிவினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு பிரிவினர் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்லசமுத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மாமுண்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பிரிவினரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும் மாவிளக்கு கொண்டு வந்த பெண்களைக்கூட திருப்பி அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில் முன்பு திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் மோதிக் கொண்டனர். 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மல்லசமுத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்ததை அடுத்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.மோதல் தொடர்பாக வண்டு முருகன் என்ற ஜீவானந்தம் (24), மாதேஸ்வரன் (36) ஆகிய இருவர் மீது மல்லசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோதல் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.