நாமக்கல் மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை
நாமக்கலில் மாவட்ட பதிவாளர் அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் புதன்கிழமை பரபரப்பான சூழல் காணப்பட்டது.
நாமக்கலில் மாவட்ட பதிவாளர் அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் புதன்கிழமை பரபரப்பான சூழல் காணப்பட்டது.
நாமக்கல்லை அடுத்த நல்லிப்பாளையம் காவல் நிலையம் அருகே ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள அசல் பத்திரப் பதிவு பிரிவில் பத்திர பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெய்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அசல் பத்திரப் பதிவு இணை சார்- பதிவாளர் அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் நல்லம்மாள் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.17 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து, சார்- பதிவாளர் (பொறுப்பு) சுகம் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் புதன்கிழமை பிற்பகலுக்கு மேல் பத்திரங்களைப் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டதோடு, அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழலும் காணப்பட்டது. இச் சோதனை புதன்கிழமை இரவு வரையில் நீடித்தது.