பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரகத்துக்குள்பட்ட கீரம்பூரில், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
பரமத்தி அருகே உள்ள கோனூரைச் சேர்ந்த காளியண்ணன் மகன் பாலு (35), லாரி உரிமையாளர். இவர் திங்கள்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல்லில் இருந்து கீரம்பூர் நோக்கி சென்றார். அப்போது, கீரம்பூர் நான்கு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக இரும்பு தடுப்பின் மீது மோதினார்.
இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.