சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஆங்கில மொழி அவசியம் என்று கோவை வாய்ஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் நவீன் அண்ணாமலை தெரிவித்தார்.
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறையின் சார்பில் ஆங்கிலத் தகவல் தொடர்பு - விழிப்புணர்வு மேம்பாட்டு கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நவீன் அண்ணாமலை பேசியது;-
உலகில் சீனம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்குப் பின்னர் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம். இப்போது உலக மயமாக்கல் காரணமாகவும், வியாபார எல்லை சர்வதேச அளவில் பரந்து விரிந்துள்ளதாலும் ஆங்கில மொழியானது அனைவருக்கும் தேவைப்படுகிறது.
ஆங்கிலம் என்பது உலகத் தகவல் மொழி. இதில் சரளமாகப் பேசினாலோ, பிழையின்றி எழுதினாலோ சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள, ஆங்கில மொழியில் நிபுணராக விளங்குதல் மிகவும் அவசியம் என்றார். கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே. செங்கோடன், செயலர் கே. நல்லுசாமி, டிரினிடி அகாடமி மெட்ரிக் பள்ளித் தலைவர் ஆர்.குழந்தைவேல், செயலர் டி. சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், இயக்குநர் - கல்வி அரசு பரமேசுவரன், நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார், வேலைவாய்ப்பு இயக்குநர் கே. மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.