குமாரபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 12 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்லிருந்து ஈரோட்டுக்கு திருச்செங்கோடு வழியாகச் சென்ற பேருந்தை குமாரபாளையத்தை அடுத்த எஸ்.பி.பி. காலனி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையிட்டனர். பறக்கும் படை அலுவலர் ஆர். பெரியசாமி தலைமையில் நடைபெற்ற சோதனையில் பேருந்தில் பயணம் செய்த இரு பயணிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 12 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் ஆர்.என். புதூரில் உள்ள தனியார் சாய ஆலையில் கணக்காளராகப் பணிபுரியும் வி. மோன்சி வர்கீஸ், உதவியாளர் குமாரசாமி என்பதும், நிறுவனத்துக்குச் சொந்தமான பணத்தைக் கொண்டு செல்லும் வழியில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.