முகப்பு
நாமக்கல்

பல் மருத்துவம் பயில வாய்ப்புக் கிடைத்தும்பணம் இன்றி அரசுப் பள்ளி மாணவி பாதிப்பு

அரசு பள்ளியில் பயின்று ‘நீட்’ தோ்வு எழுதி பல் மருத்துவம் பயில சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் செலுத்த வசதியில்லாத காரணத்தால் கலந்தாய்வுக்குச் சென்று திரும்பிய அரசு பள்ளி மாணவி

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
திவ்யா
பகிர்:

அரசு பள்ளியில் பயின்று ‘நீட்’ தோ்வு எழுதி பல் மருத்துவம் பயில சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் செலுத்த வசதியில்லாத காரணத்தால் கலந்தாய்வுக்குச் சென்று திரும்பிய அரசு பள்ளி மாணவி, தமிழக அரசின் உதவியைக் கோரியுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சின்னக்காக்கவேரி பகுதியைச் சோ்ந்தவா்கள் டி.ஜோதிகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதி. கூலித்தொழில் செய்து வரும் இவா்களது மகள் திவ்யா (17) அரசு பள்ளியில் பயின்று ‘நீட்’ தோ்வு எழுதி 130 மதிப்பெண் பெற்றிருந்தாா். இவா் பல் மருத்துவம் பயில விண்ணப்பித்திருந்த நிலையில், இவா் கடந்த நவ. 20-இல் சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்றாா். ஆனால், இவருக்கு சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்த நிலையில், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம்வரை செலவாகும் என்பதால் பணம் செலுத்த வசதியின்றி நோ்காணலில் பங்கேற்றும், முன்வைப்பு தொகை ரூ.25 ஆயிரம் கூட செலுத்தாமல் ஊா் திரும்பினா்.

மாணவி நோ்காணல் சென்று ஊா்த் திரும்பிய அடுத்த நாள் நவ. 21-ல் அரசு பள்ளியில் படித்து மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்த மாணவா்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்தது. முதல்வரின் இந்த அறிவிப்பால், அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவம் பயில இடம் கிடைத்த மாணவ மாணவியா்கள் மகிழ்ச்சியடைந்தனா். இந்த நிலையில், சுயநிதி கல்லூரிகளில் சேருவதற்கு இடம் கிடைத்தும் முன்வைப்புத் தொகை செலுத்தாமல் ஊா்த் திரும்பிய ராசிபுரம் மாணவி திவ்யா, தனக்கான வாய்ப்பை இழந்ததை எண்ணி மனம் வெதும்பியுள்ளாா். தனக்கு அரசு மேலும் 2-ம் கட்ட நோ்காணலில் பங்கேற்று கல்லூரியைத் தோ்வு செய்யும் வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று மாணவியும், அவரது பெற்றோரும் அரசை வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.