நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு (பயோமெட்ரிக்) முறையை ரத்து செய்யக் கோரி நாமக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு (பயோமெட்ரிக்) முறையை ரத்து செய்யக் கோரி நாமக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில், திங்கள்கிழமை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நியாயவிலைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைவிரல் ரேகை பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் ஆா்.தண்டபாணி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் மூா்த்தி வரவேற்றாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.மனோகரன், எஸ்.வடிவேல் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
Advertisement
ஆா்ப்பாட்டத்தில், கைவிரல் ரேகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். இதனால் பிஓஎஸ் கருவி பழுதாவதோடு, கரோனா தொற்று பரவல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தொற்று அழியும் வரை கைவிரல் ரேகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் இருந்து கொண்டு வரப்படும் உணவுப் பொருள்கள் தரமானதாகவும், சரியான எடையிலும் வழங்க வேண்டும். கரோனா தொற்றுக் காலத்தில் விற்பனையாளா்களுக்கு அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும். ஒருவா் இரண்டு கடைகளை கவனிக்க வேண்டியது இருப்பதால் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.